Pages

Search This Blog

Monday, November 14, 2011

கவிதை எழுதும் கவிதை

சித்திரம் பேசுதடி படம்தான் பாவனாவின் அறிமுகம். அசல் படத்தில் தல அஜித்துக்கு ஜோடியான பிறகு பாவனாவின் ரேஞ்ச் எங்கேயோ...கால்ஷீட்டிற்கு ஒன்று, கவிதைக்கு ஒன்று என எப்போதும் இரண்டு டைரிகள் வைத்திருக்கிறார். ஆமாம்... படப்பிடிப்பு இடைவேளைகளில் பாவனாவின் தீனி கவிதைதான். நடிகைக்குள் இருக்கும் கவிதாயினியை மெல்ல எழுப்பிக் கவிதை பாட வைத்தோம்.
 
கறுப்பு வெள்ளையாக
விரிய ஆரம்பித்த என் கற்பனை
கவிதையாக உருவாகியிருந்தது
கடந்து சென்ற
வண்ணத்துப்பூச்சி எதுவோ


எப்படியிருக்கு  கவிதை? என்று உலுக்கிய பிறகுதான் நமக்கு உணர்வே வந்தது. மனசு அந்த வண்ணத்துப்பூச்சியோடு பறந்துகொண்டிருந்தது. இப்படி கவிதையில பின்றீங்களே... படித்தது இலக்கியமா? என்றால், கண்ணசைத்து ஆமாம் என்கிறார். வார்த்தைச் சிக்கனம்தான் பாவனாவின் ஸ்பெஷல். கவிதைக்குத் தேவைப்படும் என்பதால் கைக்குட்டைக்குள் முடிந்து வைத்துக்கொள்வாரோ என்னவோ?!

உங்களைப் பற்றிக் கொஞ்சம்..?
கேரளாவுல திருச்சூர்தான் நான் பிறந்த ஊர். பிளஸ் 2 படிச்சுட்டு பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிச்சேன். அப்பா பாலச்சந்திரன் ரியல் எஸ்டேட் அதிபர். அம்மா புஷ்பா ஹோம் மேக்கர். வீட்டு வேலைகளையும் எங்களுக்குத் தேவையானதையும் பார்த்துக் கொள்வார். அண்ணன் ஜெயதேவன் கனடாவில் அனிமேஷன் கோர்ஸ் முடிச்சுட்டு, மலையாளத் திரையுலகில் இயக்குனராக முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார். அப்புறம் நான்... பாவனா... எங்கள் வீட்டின் செல்ல தேவதை..!
 
தமிழில் பார்த்து ரொம்ப நாளாச்சே? ஏன் இந்த இடைவெளி?

வருடத்திற்கு நான்கு படங்கள் நடித்துக் கொண்டிருந்தேன். இனிமேல் கணக்கிற்காக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்ததன் காரணமாகத்தான் நிறைய படங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டரில் மட்டுமே இனி நடிப்பேன்.
 
முக்கியத்துவமுள்ள கேரக்டர்னு சொல்றீங்க அசல் படத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறி யிருக்கா?

ரெண்டு ஹீரோயின் படம்னாலும், எனக்கு தான் படத்தில் அதிகமான முக்கியத்துவம் இருந்ததுங்கிறது படம் பார்த்த எல்லாருக்கும் தெரியும். அஜித் சாருடன் இரண்டு பாடல்களில் ஆடியிருக்கேன். நடிப்பிலும் பெயர் சொல்ற மாதிரியான கேரக்டர்தான்.

அஜித் எப்படி?
அழகான, அருமையான நடிகர். பந்தாவெல்லாம் பண்ணாத அவரது எளிமையான குணம் எனக்குப் பிடிக்கும்.

அப்பா ரியல் எஸ்டேட் பண்றார்; அண்ணன் இயக்குனராக ஆசைப்படுறார். நல்ல கதையை நீங்க எதிர்பார்க்குறீங்க. அப்புறமென்ன நீங்களே இணைந்து ஒரு படம் எடுத்துட வேண்டியதுதானே?

சுருக்கமா, குடும்பப் படம் என்று கேட்டிருக்கலாம். அப்பாவுக்கு இதில ஆர்வம் இல்லை. சந்தர்ப்பம் அமைந்து வந்தால் பார்ப்போம்.

செலக்டிவ்வாதானே படம் நடிக்கிறீங்க. ஷூட்டிங் இல்லாத நேரம் போரடிக்குமே?
இருக்கவே இருக்கு டி.வி, புத்தகங்கள். அதுவும் போரடிச்சா, நல்ல மெலடி எம்.பி. 3 சிடியை ஹோம் தியேட்டர்ல போட்டுட்டு கண்ணை மூடினா, கடைசி பாட்டு வரைக்கும் கேட்பேன். அடிக்கடி கவிதை எழுதவும் செய்வேன்.

சென்னை பிடிக்குமா?
பிடிக்கும். சென்னைக்கு டிக்கெட் போட்டுட்டா போதும், என்னோட சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. ஆனா சென்னை டிராபிக்தான் ரொம்ப மோசம். லோக்கலில் ஒரு இடத்திற்கு போவதென்றால் திருச்சூரிலிருந்து சென்னை வரும் நேரத்தைவிட அதிகமாகிடும். அவ்வளவு நெரிசல்.

கவிதை எழுதறீங்களே... சினிமாவுக்கு பாட்டெழுதற ஐடியா இருக்கா?
அந்த அளவுக்கு எனக்குப் புலமை இல்லை. மனசுல அப்பப்ப தோன்றுவதை, அப்புறமா நேரம் கிடைக்கும் போது எழுதி வச்சுக்குவேன். பல கவிதைகள் எழுதி வைக்காமல் காற்றோடு காணாமல் போய் விட்டன...அவர் கைகளை அசைத்ததே கவிதை போல இருந்தது!

1 comment:

Post a Comment