Pages

Search This Blog

Thursday, February 23, 2012

மூன்று பேரை திருமணம் செய்த பெண் யாருக்குச் சொந்தம்: கணவர்கள் மோதல்



ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை சுப்பிரமணி மகள் ரேணுகா, 27. இவரது 14 வயதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். தென்னரசு, வேலை தேடி வெளிநாட்டிற்கு சென்றார். பட்டுக்கோட்டையில் ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை ரேணுகா சந்தித்தார். அப்போது முதல் திருமணத்தை மறைத்த ரேணுகா, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செந்தில்குமாரை திருமணம் செய்து கொண்டார். (செந்தில்குமார் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர்).

இருவரும் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தநிலையில், அரண்மனை அருகே ஒரு கடையில் ரேணுகா வேலைக்கு சென்றார். அங்கு வந்து சென்ற வாடிக்கையாளரான மதுரை திருப்பரங்குன்றம் செந்தில்மனோகரன் என்பவரிடம் ரேணுகா, முதல் இரண்டு திருமணம் மற்றும் குழந்தைகள் விபரத்தை மறைத்தார். இவர்கள், கடந்த ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் இவர்கள் ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் வசித்து வந்தனர்.

மனைவியை காணவில்லை என செந்தில்குமார் தேடி வந்தபோது, சக்கரக்கோட்டையில் வசித்து வருவது தெரிந்தது. அங்கு சென்று ரேணுகாவை தன்னுடன் அனுப்பி வைக்க செந்தில் மனோகரனை வற்புறுத்தினார். இருவருக்கும் இடையே, ரேணுகா, யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் ராமநாதபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள், ரேணுகாவிடம் நடத்திய விசாரணையில், ""ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழவே, முதல் மற்றும் இரண்டாவது திருமணத்தை மறைத்து மூன்றாவது திருமணமும் செய்து கொண்டேன்,'' என தெரிவித்தார்.

"இனி ராமநாதபுரம் பக்கமே தலைகாட்டக்கூடாது' என எச்சரித்து, பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோரிடம் ரேணுகாவை, போலீசார் ஒப்படைத்தனர். இதில் ஏமாற்றமடைந்த செந்தில்மனோகரன், செந்தில்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment