தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு: சட்டக் கல்லூரி மாணவர்கள் மறியல்
தகுதித் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டக் கல்லூரிகளில் சட்டப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் வழக்கறிஞராக நீதிமன்றங்களில் ஆஜராவதற்கு, அகில இந்திய பார் கவுன்சிலின் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு சட்டக் கல்லூரி மாணவர்களும், வழக்கறிஞர்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்தத் தேர்வு 3 முறை தள்ளிவைக்கப்பட்டது. இந் நிலையில் இத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் எத்திராஜ் கல்லூரி, லயோலா கல்லூரி மையங்களில் தேர்வு எழுதுவதற்காக சட்டக் கல்லூரி மாணவர்கள் வந்தனர்.
எத்திராஜ் கல்லூரியில் தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில், சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் தேர்வு நுழைவுச் சீட்டை தீயிட்டு கொளுத்தி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸôர், அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை திரும்ப பெறச் செய்தனர். இதேபோல லயோலா கல்லூரியிலும் தேர்வை புறக்கணித்த சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment