Pages

Search This Blog

Wednesday, September 28, 2011

உலக அழிவு உண்மைதான்! ஆனால் அது எப்போது? ( Will the world see its end? )


Will the world see its end? - Tamil Katturaikal - General Articles அடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில இணையதளங்கள் மூலமாகவும், மின் அஞ்சல் வழியாகவும் இன்ன பிற ஊடகங்கள் வாயிலாகவும் அண்மைக் காலமாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் கூட வெளிவந்துள்ளன.

அமெரிக்க துணைக் கண்டத்தில் வாழ்ந்து வந்த 'மாயன்' என்கிற சமூகத்தாரின் பஞ்சாங்கம் 2012ம் ஆண்டுடன் முடிவடைகிறது என்பதும், 2012ல் உலகம் அழிந்து விடும் என்பதை அவர்கள் அறிந்து இருந்ததனால்தான் அதற்கு மேல் அந்த பஞ்சாங்கம் தொடரவில்லை என்பதுமே இக்கூற்றினை பரப்புவோரின் வாதத்திற்கு ஆதாரமாகும்.

இன்னொரு சூரியன்
ஆகாயக் கோள்கள், நட்சத்திரங்கள் என்பன போன்றவற்றின் நிலைகளில் நேர்ந்திடும் மாற்றங்களையும் கூட இந்த வாதத்திற்கு சான்றாக அவர்கள் எடுத்தாளுகின்றனர். அவற்றுள் புதிதாக வந்த ஒரு கூற்றுதான் இன்னொரு சூரியன் தோன்றப் போகிறது என்பதும்!

வானியலை பற்றியும், நட்சத்திரங்களின் தோற்றம் - பரிணாமம் போன்றவை பற்றியும் எதுவுமே தெரியாது இருந்த காலத்தில் சூரியனையோ, சந்திரனையோ போல ஒளிர்கின்ற புதிய பொருள் ஒன்று வானத்தில் திடீரென தோன்றினால் எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக பயந்திடத்தானே செய்திருப்பான்?

இன்னுங்கூட மிகுதியானவர்களுக்கு வானியல் பற்றி போதிய அறிவோ, விழிப்புணர்வோ இல்லாத நிலையில் - அடுத்த வருடம் நாம் இரு சூரியன்களை காண்போம் என்று ஓர் அறிவிப்பை ஏதாவது ஒரு விஞ்ஞானி வெளியிட்டால் வரவிருக்கும் ஓர் பேராபத்தின் முன்னறிவிப்பாகவே இருக்கக் கூடும் அது என்று பலரும் எண்ணத்தானே செய்வர்! அதற்காக அந்த பாமரர்களை குற்றஞ்சாட்ட முடியுமா?

இணைய தளங்களில்...
கடந்த ஜனவரி மாத இறுதியில்தான் அப்படி ஒரு செய்தி இணையதள வெளியீடுகள் சிலவற்றில் பிரசுரமாகி இருக்கின்றன. (நம் நாட்டு இணையதளங்களில் இச்செய்தி இடம்பெறவில்லை என்பது சற்று ஆறுதலான விசயம்) இதனைத் தொடர்ந்து உடனடியாக வேறு சில விஞ்ஞானிகள் அதனை மறுத்துக் கூறியபோதும் அந்த மாற்றுக் கருத்துக்கு - முந்தைய செய்திக்கு கிடைத்த முக்கியத்துவம் கிடைத்திடவில்லை. எனவே அந்த தகவலின் அடிப்படை என்ன? உலகம் அழியத்தான் போகிறதா? என்பன பற்றி நாம் இங்கே சற்று ஆராய்வோம்.

நீர் சுள்ளான்
ஹைட்ரஜன் என்கிற நீரிய வாயு ஹீலியமாக மாறிடும் செயல்பாட்டின் மூலம்தான் நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. நட்சத்திர காம்பில்தான் இந்த செயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும்போது ஹைட்ரஜனின் அளவு குறையக் கூடிய தருணத்தில் அதனால் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாமல் ஆகிவிடுகிறது. உட்புறத்தில் இருந்து கொண்டிருக்கும் வெப்பம் தணிந்து விட்டால் நட்சத்திரம் தனது ஈர்ப்பு சக்தியால் தானாகவே சுருங்கிப் போய் விடும். இவ்வாறு சுருங்கி விடும் நடைமுறையே மீண்டும் வெப்பத்தை உருவாக்கி விடும். அந்த வெப்பத்தால் ஒளிர்கின்ற நட்சத்திரம்தான் "நீர் சுள்ளான்" என்ற பெயரில் அறியப்படுகிறது. கடைசியில் வெப்பத்தை தொடர்ந்து தாங்கிட இயலாத நிலை நேரும் போது - ஒளியை உற்பத்தி செய்திட இயலாமல் ஆகி, நம் பார்வையை விட்டு அது மறைந்து விடுகிறது.
நாம் இன்று காண்கிற நமது சூரியனுக்கும் எதிர்காலத்தில் இப்படி ஒரு முடிவே நேர்ந்திடக் கூடும். இந்த அறிவியல் விளக்கம் பாமரர்களும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையில் தான் கூறப்பட்டுள்ளது. இந்த சூரியனும், நட்சத்திரங்களும் கடைசி காலத்தில் செக்க சிவந்த பிரம்மாண்டங்களாக ஆகி அதன் பின்னர்தான் அவை 'நீர் சுள்ளான்'களாக ஆகிவிடும்.

சூப்பர் நோவா
ஆனால் சூரியனைவிட ஒன்றரை மடங்கிற்கு மேல் பெரிய அளவிலான கோள் வடிவ நட்சத்திரங்களின் விதி வேறுபட்டதாகும். அவற்றின் முடிவு அதி பயங்கர வெடிப்பின் மூலம் நியூட்ரான் நட்சத்திரமாகவோ, இருட்டுப் பள்ளமாகவோ அவை ஆகிவிடும். அத்தகையதோர் வெடிப்பின் வாயிலாக வெளிப்படும் எரிசக்தி, சூரியனுக்கு இணையானதோர் நட்சத்திரம் அதன் ஆயுட்காலம் முழுமைக்கும் வீசுகின்ற அளவிற்கு இருக்கும். ஒரு நட்சத்திர சமூகத்தை விட அதிகமான ஒளியுடன் அப்போது அது காட்சி தரும். ஒரு நட்சத்திர சமூகத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் இத்தகையதோர் மகா வெடிப்பின் தீவிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். இத்தகைய வெடிப்புகள் 'சூப்பர் நோவா' என்ற பெயரில் அறியப்படுகின்றன.

திருவாதிரை நட்சத்திரம்
திருவாதிரை என்கிற செக்கச் சிவந்ததோர் வண்ணம் பெரிய நட்சத்திரமாகும். அதன் கோள் வடிவம் சூரியனை விட 20 மடங்கு பெரியதாகவும், அதன் விட்டம் பல நூறு மடங்கு பெரியதாகவும் இருக்கும். சூரியன் இருக்கும் இடத்தில் அது இருக்குமானால் செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் பூமி ஆகிய கோள்களும் விரவிக் கிடக்கின்ற இதர பல கிரகங்கள் யாவும் அதனுள் ஆழ்ந்து - அமிழ்ந்து போயிருக்கும்! அந்த அளவுக்கு பிரம்மாண்டமானதாகும் திருவாதிரை என்கிற நட்சத்திரம்!

இந்த நட்சத்திரம் அடுத்த ஆண்டு ஓர் சூப்பர் நோவாவாக ஆகி வெடித்து சிதறும் என்றும், அப்போது அதன் ஒளி சூரியனின் ஒளிக்கு ஒப்பானதாக இருக்கும் என்றும் - ஆஸ்திரேலியாவில் உள்ள தெற்கு குயின்ஸ் பல்கலைக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் பிராண்ட் கார்ட்டர் அறிவித்தார்.
இது சரியல்ல என்றும், திருவாதிரை நட்சத்திரம் எப்போது சூப்பர் நோவாவாக ஆகும் என்பதை கனித்து முன்னறிவிப்பு செய்ய எவராலும் முடியாது என்றும் வேறு பல அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் திருவாதிரை சூப்பர் நோவாவாக ஆனாலும் கூட அது ஏறத்தாழ சந்திர ஒளியின் அளவுதான் பூமியில் தென்படும் என்றும் சுட்டிக்காட்டினர் அந்த அறிவியலாளர்கள். ஆயினும், இம்மாற்று கருத்துக்களுக்கு எந்த ஒரு இணையதளமும் உரிய முக்கியத்துவத்தை வழங்கிடவில்லை.

நாம் இன்று கற்றறிந்துள்ளவற்றின் அடிப்படையில் திருவாதிரையை போன்றதோர் நட்சத்திரம் நிச்சயமாக சூப்பர் நோவாவாக ஆகி விடும் என்பது உண்மையே! ஆனால் அது எப்போது நிகழும் என்பதை கணித்துச் சொல்லும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சியை நாம் இன்னும் எட்டவில்லை. என்றாவது ஒருநாள் அதற்கான அறிவாற்றலை மனிதன் அடையக் கூடும். அதன் கால அளவைக்கூட இன்று நம்மால் கணக்கிட்டு கூறமுடியாது.

பூமி சாம்பலாகி விடும்
நாளை நடப்பவைகளில் சிலவற்றை நிச்சயமாக நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக மரணத்தைக் கூறலாம். மரணம் சர்வ நிச்சயமான ஒன்று! ஆனால் அது எப்போது? எங்கே? எப்படி நேரும் என்பதை எவறாலும் கூறிவிட இயலாது அல்லவா. அதுபோலத் தான் திருவாதிரை வெடித்துச் சிதறும் என்பது திண்ணம். ஆனால் அது நிகழும் நாள் எந்நாள் என்பது எவருக்கும் தெரியாது.
சூரியன் அதன் முடிவை நெருங்கும்போது செக்கச் சிவந்ததோர் பிரம்மாண்டமாக ஆகிவிடும். அப்போது அது செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைவரை விரிவடைந்து பெரிதாகி விடும். அதனிடையே பூமி எரிந்து சாம்பலாகி விடும். அத்துடன் ஆவியாகி சூரியனுடன் இணைந்து விடும். அதுவரை பூமியில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் யாவும் அத்துடன் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும். மனித இனம் அதுவரை பூமியில் நீடித்து இருக்குமா என்பதை யாராலும் கூற முடியாது.

கட்டுப்பாடற்ற புவி வெப்பத்தின் மூலமாகவோ, சாம்ராஜ்ஜியங்களை கட்டமைப்பதற்கான பேராசையின் விளைவாக ஏற்படக் கூடிய போர்களின் மூலமாகவோ ஒட்டுமொத்த உயிரின வாழ்வு மண்டலத்தையும் மனிதர்களே அழித்து விடாமல் இருந்தால் ஒருவேளை இப்புவியில் மனித இனமும் எஞ்சியிருக்கக் கூடும். ஆயினும், நாம் அறிந்துள்ளதோ, அறியாததோ ஆன காரியங்களின் மூலம் இந்த பூவுலகின் ஆயுள் ஒருநாள் முற்றுப் பெறத்தான் போகிறது.

அழிவு நிச்சயம்
உதாரணமாக விண்வெளியில் தவழ்ந்து கொண்டிருப்பவற்றுள் ஏதேனும் ஒரு பெரும் பொருள் நிலை குலைந்து வேகமாக வந்து பூமியில் மோதினால் இங்கு வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மடிந்து விட அதுவே போதுமானதாகும். அவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு தான் என்று விஞ்ஞானிகள் கூறினாலும் - அப்படி எதுவும் நிகழாது என்று திட்டவட்டமாக கூறிட எவராலும் இயலாது.

சூரியனிலிருந்து வீசுகின்ற ஒளியின் அளவு ஏதேனும் காரணத்தால் சற்றே கூடினாலும் இந்த பூமியில் உயிர் வாழ முடியாத நிலை நேர்ந்திடும். இதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவே என்று அறிவியலாளர்கள் கூறுவர். என்றாலும், நாம் இன்று காண்கிற இந்த பிரபஞ்சம் என்றாவது ஒரு நாள் அழிந்து விடும் என்பதும் சர்வ நிச்சயமாகும்.

ஆயினும் உடனடியாக இந்த உலகம் அழிந்து விடப்போவதில்லை என்பதும் அதுபோலவே நிச்சயமானதேயாகும். அப்படி நிகழ்வதற்கேற்ற எந்த ஒரு சாத்தியக் கூறினையும் தற்போது நம்மால் காண முடியவில்லை. இதே உலகம் அழியப் போகிறது என்று கூறுவோர் அதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டும் காரணிகளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அவை அடிப்படையற்றவை என்பது புலனாகும். இத்தகைய வதந்திகள் இதற்கு முன்னரும் பலமுறை பரவியுள்ளன.

அறியாமை
உலகம் அழியப் போகிறது என்று ஏறத்தாழ கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலர் கூறினர். அதாவது 2000ம் ஆண்டில் ஏசு கிறிஸ்து திரும்பவும் உலகில் வருவார் என்றும், அத்துடன் உலகம் அழிந்து போய் விடும் என்றும் ஒரு சாரார் கூறினர்
.

2000ம் ஆண்டுடன் பெரும் பிரளயங்களோ, வேறு வகையான மாபெரும் இயற்கை சீற்றங்களோ நேர்ந்திடும். அதன் மூலம் உலகம் அழிந்திடும் என்று அடுத்து ஒரு சாரார் அறிவித்தனர்.

இப்படியெல்லாம் பரவிய பற்பல வதந்திகளால் தாக்குண்டு, உலகம் அழிவதற்கு முன்பாகவே தற்கொலை செய்து தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பற்றிய செய்திகள் பலவும் அப்போதே வெளிவந்தன. இவர்களில் பலரும் ஒரு வேளை உள்ளபடியே நம்பிக் கொண்டிருந்தவற்றைத்தான் அறிவித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி எதுவும் நேர்ந்திடவில்லை!

அறிவுடைமை
ஆண்டுகள் உள்ளிட்ட காலக்கணக்கீடுகளை ஏற்படுத்தியிருப்பது மனிதர்களது சவுகரியத்திற்காகத் தானேயன்றி பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் இதற்கெல்லாம் எந்த பங்கும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளும் போதுதான் இத்தகைய அறியாமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளின் பாற்பட்ட அறிக்கைகளின் அர்த்தமின்மையை உணர்ந்திட இயலும்.

உலகம் அழியும்போது அதை தடுக்க எந்தச் சக்தியாலும் முடியாது. ஆனால் அது எப்போது நிகழும் என்பதை திட்டவட்டமாக எவராலும் கூறவும் முடியாது. ஆகவே உலக அழிவை பற்றி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட்படுத்தாமல் அது பற்றிய அனாவசியமான அச்சங்களை விட்டு விலகி ஆக்கப்பூர்வமான வகையில் வாழ்க்கையை வாழ்வதுதான் அறிவுடைமையாகும்.

3 comments:

aotspr said...

அருமையான பதிவு.....
தொடர்ந்து எழுதுங்கள்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

SURYAJEEVA said...

உலகில் மனிதன் அழியும் வாய்ப்பு இருக்கிறது... உலகம் இல்லை...

நிரூபன் said...

காலமும், தொழில் நுட்பங்களும் தான் இன்றைய சூழலில் மனிதர்களின் இருப்பினைத் தீர்மானிக்க வேண்டும் நண்பா.

Post a Comment