Pages

Search This Blog

Monday, January 09, 2012

நதிகள் இணைப்புத் திட்டம் என்னவாயிற்று?-மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி





நதிகளை இணைக்கும் திட்டம் என்னவாயிற்று. அதுதொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்த போது, 2002-ம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டது. இந்த வறட்சியை போக்கவும், வெள்ளம் ஏற்படும் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் தடுக்கும் வகையிலும் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நதிகள் இணைப்பு திட்டத்தை அறிவித்தார்.

அதுதொடர்பாக அறிக்கை அளிக்க அதிகாரிகள் குழுவையும் வாஜ்பாய் அமைத்தார். அந்தக் குழு தென்னிந்திய நதிகள் இணைப்பு, வட இந்தியாவில் இமயமலை நதிகள் இணைப்பு என்ற 2 வகையான நதிகள் இணைப்பு திட்டத்தை அறிக்கையாக அளித்தது.

தென்னகத்தில் ஓடும் 16 நதிகளை இணைத்து நதி நீர் பங்கீடு அமைப்பு அதாவது மின்சார கிரிட் போல வாட்டர் கிரிட் ஏற்படுத்த வேண்டும். வட மாநிலத்தில் ஓடும் மகாநதி மற்றும் கோதாவரி நதி நீரை திருப்பி பெண்ணாறு, கிருஷ்ணா, வைகை, காவிரி ஆற்றில் சேர்ப்பதும் இந்த திட்டத்தில் அடங்கும்.

இதேபோல கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து மேற்கில் வீணாகப் பாயும் நதிகளின் தண்ணீரை கிழக்கு பகுதிக்கு திருப்பி சிறிய நதிகளுடன் சேர்க்க வேண்டும் என்றும் அந்தக் குழு தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

இமயமலை நதிகளான கங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளை இணைத்து, அணைகள் கட்டி நீர்ப்பாசனத்துக்கும், மின்சார உற்பத்திக்கும் பயன்படுத்துவது 2-வது திட்டமாகும்.

இந்த திட்டங்கள் பின்னர் வந்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தூக்கி தூர வீசப்பட்டு விட்டன. ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்டே மத்திய அரசு இத்திட்டத்தைக் கைவிட்டது. இத்திட்டங்கள் குறித்து ராகுல் காந்தி கூறுகையில், இந்த திட்டம் சாத்தியப்டாது, ஒத்துவராது என்று எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல கூறினார்.

நதிகள் இணைப்பு திட்டத்துக்கு மிகப்பெரிய அளவில், பல லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்பதால் கிடப்பில் போடப்பட்டதாக மத்திய அரசுத் தரப்பில் பேசப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நதிகள் இணைப்பு திட்டம் எந்த நிலையில் உள்ளது. எந்த அளவுக்கு வேலைகள் நடந்து உள்ளன, இத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்று ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்கும்படி, இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவியாக பணியாற்றும் வழக்கறிஞர் ரஞ்சித் குமாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2 comments:

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துகள்...

சேகர் said...

கிடைப்பில் போடப்பட்ட திட்டத்தில் இதுவும் ஒன்று..

Post a Comment